சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் சங்ககிரி,வி.என்.பாளையத்தில் தனியார் இடத்தில் தானாக முளைத்து கடந்த ஐந்து வருடங்கள் வளர்ந்திருந்த ஆலமரத்தை உயிருடன் எடுத்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூர் ஏரிகரையோரம் ஞாயிற்றுக்கிழமை நட்டு வைத்தனர்.
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தனியார் இடத்தில் தானாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்ந்த நிலையில் இருந்த ஆலமரத்தை அகற்றி அவ்விடத்தில் புதிதாக கட்டிடப் பணிகளை மேற்கொள்ள இடத்தின் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் மரத்தை அகற்ற மனமில்லாத அவர், சங்ககிரி வட்டப்பகுதிகளில் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் பசுமை சங்ககிரி அமைப்பினரை தொடர்பு கொண்டு மரத்தை உயிருடன் எடுத்து வேறு ஒரு இடத்தில் வைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனையடுத்து பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், சண்முகம், சுந்தர், காந்தி, தொழிலதிபர்கள் செல்வராஜ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கனரக இயந்திரங்களை கொண்டு ஆலமரத்தை ஆணி வேர் பாதிக்கப்படாமல் உயிருடன் எடுத்துச் சென்று சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூர் ஏரி கரையோரத்தில் ஆல மரத்தின் கிளைகளில் மாட்டு சானத்தை வைத்து நட்டு வைத்தனர்.
ஆலமரத்தை உயிருடன் எடுத்துச் சென்று நட்ட பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர்.