மதுரை: மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். வழக்கறிஞரான இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய் கிழமை காலை மாரிச்செல்வம் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவரைத் தேடி வீட்டுக்கு வந்த 2 நபர்கள், வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்ததில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீட்டின் உரிமையாளர் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர காவல் தெற்கு துணை ஆணையர் தங்கதுரை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். பட்டப்பகலில் பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.