ஓய்வுபெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் நல்லம்ம நாயுடு. இவர் பல வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அதிகாரியாக இருந்தவர் இவர்.
இவரது மறைவு செய்தி அறிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்.பி.யாகவும் இருந்து ஓய்வுபெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக - எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும் - நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாகப் பணியாற்றியவர்.
ஊழல் வழக்குகளை - குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்தவர். உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் “நீதி வென்றது” என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில்தான் “என் கடமை - ஊழல் ஒழிக” என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி - துறையில் தான் சந்தித்த சவால்கள் - அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் முதல்வர் கருண்நிதியால் விசாரணை அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு - பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து - தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்த சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் - அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நேரில் அஞ்சலி
நல்லம நாயுடு இல்லத்துக்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.