தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:
தெற்கு வங்கக் கடல் பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை.
இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது காற்று உந்துதல் குறைவாக இருப்பதால் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்றும் இது புயலாக மாறவும் வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.