காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு ஆட்சியர் மா.ஆர்த்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது.. கடந்த அக்டோபர் மற்றும் நடப்பு நவம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவ மழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 341 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளும் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
இதனால் உபரி நீரானது கலங்கல்கள் வழியாக செல்கிறது. தற்பொது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாலாறு, செய்யாறு, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஏரிகள், ஆறுகள், தரைப்பாலங்கள் மற்றும் தடுப்பணை உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம்.
முக்கியமாக வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர்களையும், கால்நடைகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்கவும், பொதுமக்கள் விழிப்புணர்வோடும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.