மக்கள் வாக்களிக்க வராததால் வெறிச்சோடிய அம்முண்டி ஊராட்சி வாக்குச்சாவடி
மக்கள் வாக்களிக்க வராததால் வெறிச்சோடிய அம்முண்டி ஊராட்சி வாக்குச்சாவடி

மக்கள் வாக்களிக்க மறுப்பு: வெறிச்சோடிய அம்முண்டி ஊராட்சி வாக்குச்சாவடிகள்

அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவியை பொதுப்பிரிவுக்கு ஒதுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊராட்சி மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை.

வேலூர்: அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவியை பொதுப்பிரிவுக்கு ஒதுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊராட்சி மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால், அந்த ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த 5 வாக்குச்சாவடிகளும் வாக்காளர்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி ஊராட்சியில் மொத்தம் 2,049 வாக்குகள் உள்ளன. இடஒதுக்கீட்டில் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஊராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் மட்டுமே உள்ளனர். அவர்களும் கலப்பு திருமணம் செய்தவர்கள்.

பட்டியலின வாக்கு அதிகம் இல்லாத அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அந்த ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதுடன், அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சியிலுள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தவிர, உள்ளாட்சித் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இந்த ஊராட்சி மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காட்பாடி ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தலையொட்டி அம்முண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் அம்முண்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால், 5 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

அந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர். எனினும், அந்த ஊராட்சியில் மட்டும் யாரும் வாக்களிக்க வரவில்லை. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வாக்களிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர், பொதுமக்கள் கட்டியிருந்த கருப்புக் கொடிகளை போலீசார் அகற்றினர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியது: அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கக் கோரி பொதுமக்கள் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தவிர, அம்முண்டி ஊராட்சித் தலைவர், 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

அதேசமயம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்களிக்க அம்முண்டி ஊராட்சியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்கன வே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வாக்காளர்களை யாரும் தடுக்கக்கூடாது என்பதற்காக அம்முண்டி ஊராட்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், அந்த ஊராட்சியில் இருந்து யாரும் வாக்களிக்கவில்லை என்றார்.

'அரசுப்பணிகூட தேவையில்லை'

அம்முண்டி ஊராட்சியில் யாரும் வாக்களிக்க வராத நிலையில், அந்த ஊராட்சியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களை வாக்களிக்க வரும்படி தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதிலளித்த துப்புரவுப் பணியாளர்கள், எங்களுக்கு அரசுப் பணிகூட தேவையில்லை. ஊரை பகைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இயலாது எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com