கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நவம்பர் 1 ஆம் தேதி நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 7 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர், திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வேந்திரன், கம்மவார் மகளிர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஆழ்வார் சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் , கோயில் நிர்வாக அதிகாரி நாகராஜன் , கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெறும். விழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் உலா நடைபெறும். 9 ஆம் திருநாளான இம்மாதம் 29 ஆம் தேதி தேர் திருவிழா அரசு உத்தரவின் படி நடைபெறும். 12 ஆம் திருநாளான நவம்பர் 1 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.