எழும்பூர் நடைபாதைகளில் வசித்து வந்தவர்கள் பெரியமேட்டில் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தங்களுக்கான உணவை குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தில் கொண்டு வந்ததால் உண்ண மறுத்துவிட்டனர்.
வீடு வீடாக வந்து குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தின் பின் பகுதியில் எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் அடங்கிய பாத்திரங்களை வைத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு வந்தனர். இந்தக் காட்சியை அங்கிருந்த சிலர் தங்களது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
குப்பைக் கூடைகளை வைத்து எடுத்து வரும் வாகனத்தின் பின்பகுதியில் குளோரின் பவுடரை தெளித்து, அதன் மீது பாத்திரங்களை வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவினர் அங்கு மதியம் 2 மணிக்குச் சென்றனர். அப்போது அவரை, நடைபாதையில் வசித்து வந்தவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட உணவை அவர்கள் யாரும் தொடக்கூடவில்லை.
இது குறித்து வாகன ஓட்டுநர் வினோத் கூறுகையில், மிகவும் சுத்தமான முறையில்தான் உணவு சமைக்கப்பட்டது. இந்த வாகனம் சமீபகாலமாக குப்பைகள் சேகரிக்கப் பயன்படுத்தப்படவில்லை என்கிறார். இது குறித்து மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, அது குப்பை சேகரிக்கும் வாகனத்தைப் போல இருந்தாலும், அது குப்பை சேகரிக்கப் பயன்படுத்தப்படாத வாகனம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அந்த முகாமில் சுமார் 20 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் நடைபாதைகளில் வசித்தாலும் சுத்தமான உணவை நாங்களே சமைத்துக் கொள்வோம். இங்கு சமைக்கும் வசதியில்லை. இவர்கள் கொடுக்கும் உணவைத்தான் சாப்பிடும் நிலையில் இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். குப்பை வண்டியில் கொண்டுவரப்பட்டதால், அந்த உணவை சாப்பிடாமல் அப்பகுதியிலிருக்கும் சாலையோர உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர்.