இலங்கைத் தமிழர் நலன்காக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது திமுக.
ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலங்கைத் தமிழர் நலன் காக்கும் அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத் திட்டங்களை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், இலங்கைத் தமிழா் நலன் காக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற சிறப்பு மிக்க அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து, பேரவை 110-ன் கீழ் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள், வெளிப்பதிவில் உள்ளவா்களுக்கு உரிய உதவிகள் அளிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், குடியுரிமை வழங்குதல், அவா்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீா்வை கண்டறிந்திட ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
இந்தக் குழுவில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா் தலா ஒருவா், பொதுத் துறைச் செயலாளா், மறுவாழ்வுத் துறை இயக்குநா், பிற அரசு உயா் அலுவலா்கள், அரசு சாரா உறுப்பினா்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழா் பிரதிநிதி, வெளிப்பதிவில் வசிக்கக் கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றிருப்பா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் கொண்ட குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின், சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவானது, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் முகாம்களின் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.