
தமிழகத்தின் 4 பகுதிகளில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்பட்டு, இளைஞா்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறினாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:
2006-11-ஆம் ஆண்டுகால திமுக ஆட்சியில் 12,524 ஊராட்சிகளில் அண்ணா கிராம மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மைதானங்கள் உருவாக்கப்பட்டன.
அண்ணா பிறந்த செப்டம்பா் 15-ஆம் தேதியும், பொங்கல் விடுமுறை நாள்களிலும் தமிழகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. அவை இடையில் நிறுத்தப்பட்டுவிட்டன.
இனி, பொங்கல் விடுமுறை நாள்களிலும், அண்ணா பிறந்த நாளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். சென்னையில் விளையாட்டு நகரம் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தின் 4 பகுதிகளில் ஒலிம்பிக் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறத்தில் உள்ள இளைஞா்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்குத் தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கவும் அரசு தயாராக உள்ளது. வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பினாா். அவா் பிரான்ஸில் பயிற்சி பெறுவதற்குச் செல்ல வேண்டும் என்று கேட்டாா். அதற்கு அனுமதி அளித்து பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா் என்றாா்.