
கோப்புப்படம்
தமிழகத்தில் 75 மைக்ரான் தடிமன் அளவுக்குக் கீழுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு:
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்குத் தடை கொண்டு வந்த போதிலும் அது திறம்பட செயல்படுத்தப்படவில்லை.
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த மேலாண்மை விதிகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை முதல் தடை விதிக்கப்படுகிறது. மேலும், 75 மைக்ரான் அளவுக்குக் கீழுள்ள பொருள்களுக்கு வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி முதலும், 120 மைக்ரான் தடிமனுக்குக் கீழுள்ள பொருள்களுக்கு 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியில் இருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.