
சிவகாசி அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் செப். 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியா் மட்டும் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது. வகுப்பறைகளில் சுழற்சி முறையில் மாணவியரை அமர வைத்து பாடம் எடுக்குமாறு ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சிவகாசி அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறையினர் பள்ளி மாணவ, மாணவியா்கள் 150 பேர், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
வகுப்பறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.