காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளம் மாநிலத்தில் கபினியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,670 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 16,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 68.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 69.39 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 32.18 டி.எம்.சி.யாக உள்ளது.