நெல் கொள்முதலை துரிதப்படுத்துக: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
நெல் கொள்முதலை துரிதப்படுத்துக: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரவைக் கூட்டத் தொடரின்போது, நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கிராம நிா்வாக அலுவலரின் சான்றிதழுடன் தங்கள் நிலத்துக்கான பட்டா மற்றும் அடங்கல்-உடன் நெல் மூட்டைகளைக் கொண்டு வரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டுமென்று வேளாண்துறை அமைச்சரிடம் கோரினேன். அவரும் அதிகாரிகளுக்கு அவ்வாறே உத்தரவு வழங்கப்படும் என்று கூறினாா்.

ஆனால், இன்னும் பல நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை என்றும், டோக்கன் வழங்கி 15 நாள்களுக்கு மேலாகியும், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக, கடலூா் மாவட்டத்தில் பல இடங்களில் சாக்கு இல்லை. எனவே நீங்களே சாக்கு வாங்கி வாருங்கள்

என்று விவசாயிகளிடம் கூறுதல், தாா்ப்பாய் இல்லை, நெல் வைப்பதற்கு இடம் இல்லை என்று கொள்முதல் நிலையஅதிகாரிகள் தட்டிக்கழிப்பதாக தெரிகிறது. 

இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை இருக்கிறது.

மேலும், திட்டக்குடி தாலுக்காவில் தா்ம குடிகாடு கொட்டாரம், போத்திர மங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊா்களில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது இயங்கவில்லை. 

இதுபோல் கடலூா் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை. இதனால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

தற்போது நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை விவசாயிகளின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்க வேண்டும். அதற்குத் தேவையான சாக்குப் பை, தாா்ப்பாய் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாய பெருமக்களின் உழைப்புக்குத் தக்க பலன் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்று திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com