சாத்தூர்: முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளுமான எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்பதில், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும்,கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் இரு பிரிவினரிடையே நிகழந்த அடிதடி மோதலால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சாத்தூர் வழியாக செல்கிறார்.
இதையும் படிக்க | கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு
அவரை வரவேற்பதற்காக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் சந்திப்பில் அதிமுகவினர் வரவேற்பு வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் வரவேற்பு அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாகனம் செல்லும் பொழுது கே.டி. ராஜேந்திர பாலாஜி ஒழிக என அதிமுக தொண்டர் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள்,கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரனின் ஆதரவாளர்களை தாக்கினார்கள். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள்,சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆதரவாளர்கள் என இருந்த நிலையில், ராஜவர்மன்ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக மாறிவிட்ட நிலையில்,மாவட்டம் இரண்டாக பிரிக்கபட்டது. தற்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் என அதிமுகவிலே இருபிரிவினர்களாக இருப்பது இந்த மோதலுக்கு காரணம் என குறிப்பிடத்தக்கது.