மானாமதுரை: மதுரையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வழிப்பறி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து வரும்போது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு திருடன் இறந்தான். மற்றொரு திருடன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூர் ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி மகன் விஷ்ணு (19), கணேசன் மகன் ஹரி (20) இவர்கள் இருவரும் நள்ளிரவு மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறி செய்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இவர்களை விரட்டியபோது இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பித்து மானாமதுரை பகுதிக்கு வந்தனர்.
இதையும் படிக்க | சுற்றுலா தினத்தையொட்டி தொல்லியல் பயணம்!
மானாமதுரையில் மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் பகுதியில் இவர்கள் வந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விஷ்ணு தலையில் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஹரி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறான்.
உயிரிழந்த விஷ்ணு மீது மதுரை மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து மானாமதுரை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.