புதுக்கோட்டை: மாநிலத்திலேயே அதிக தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தையொட்டி தொல்லியல் பயணம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இப்பயணத்தை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எம்எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றைச் சொல்லும் தொல்லியல் இடங்களான மலையடிப்பட்டி, குன்றான்டார்கோவில், திருமயம், விசலூர், நார்த்தாமலை, கொடும்பாளூர், திருவேங்கைவாசல், ஆவூர், காட்டுபாவா பள்ளிவாசல், ராஜகுளத்தூர், திருக்கோகர்ணம் ஆகிய இடங்கள் இப்பயணப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாட்டின் முக்கியமான தொல்லியல் ஆய்வாளர்கள் சு. ராஜவேலு, ஆர். ஆர். சீனிவாசன், ராமநாதபுரம் ராஜகுரு, ஜெ. ராஜாமுகமது, கரு. ராஜேந்திரன், ஆ. மணிகண்டன், திருச்சி பார்த்தி உள்ளிட்டோர் இப்பயணத்தில் பங்கேற்றனர்.
விளையாட்டுத் துறை பயிற்சி மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பொதுமக்கள் 4 பேருந்துகளில் பங்கேற்றனர்.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் இப்பயணத்தில் விளக்கப்பட்டன. மாவட்ட சுற்றுலாத்துறை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.