முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அரசின் கரோனா வழிகாட்டுதலை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளதே தவிர, போடக் கூடாது என்று கூறவில்லை. தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது. செவிலியர் காலிப் பணியிடங்களில், பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். செவிலியர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதிசெய்யுமாறு வெளியிடப்பட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக மாநில சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது. அதேவேளையில், நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.