கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
Updated on
1 min read

கோவில்பட்டி : கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

இதை முன்னிட்டு கோயில்நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 5.30 மணிக்கு மேல் கொடிப்பட்டம், மாட வீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிப்பட்டத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றிற்கு 18 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் (திமுக), ராமச்சந்திரன் (அதிமுக)  முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா,நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், கம்மவார் சங்க தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், பிராமணாள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதியுலா நடைபெறும். இரவு 7 மணிக்கு மண்டகப்படிதாரர் பிராமணாள் சமூகத்தினர் சார்பில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம் 13ஆம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் கம்மவார் சங்கம் சார்பில் நடைபெறுகிறது. 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை, யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. 15ஆம் தேதி கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com