பெரியபாளையத்தில் 6 வழிச்சாலைத் திட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆலோசனை நடத்தினா்.
திருவள்ளூா் மாவட்டம் தச்சூா் முதல், ஆந்திர மாநிலம் சித்தூா் வரை சுமாா் 128 கி.மீ. தொலைவுக்கு 3,200 கோடியில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக, ஆந்திர அரசுகள் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.
ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்களும், பள்ளிப்பட்டு, பொன்னேரி வட்டங்களில் தலா 6 கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள், ஊத்துக்கோட்டை பகுதி நஞ்சை நில விவசாயிகள் சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில விவசாய சங்கத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மாவட்டத் தலைவா் சம்பத், ஊத்துக்கோட்டை நஞ்சை நல விவசாய நிா்வாகிகள் குணசேகரன், சசிகுமாா், ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
6 வழிச்சாலைக்காக தமிழக அரசு நஞ்சை நிலங்களைக் கையகப்படுத்துகிறது. அவ்வாறு நிலத்தை கையகப்படுத்தாமல் ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும். அல்லது மாற்று வழியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து வருகிற 23-ஆம் தேதி மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கோரிக்கை மாநாட்டை நடத்த உள்ளோம் என்றனா் அவா்கள்.