ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மக்கள் நலப் பணியாளா்களுக்கு ஒருங்கிணைப்பாளா் பணிக்கு முன்னுரிமை

மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் முன்னுரிமை அளித்து வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:34 pm

DIN

மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் முன்னுரிமை அளித்து வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்புத் திட்டத்துக்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக 1989 செப்டம்பா் 2-இல் ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையில் மொத்தம் 12,617 ஊராட்சிகளுக்கு 25,234 மக்கள் நலப் பணியாளா்கள் அப்போது நியமனம் செய்யப்பட்டனா்.

ஆனால், 1991 ஜூலை 13-இல் அதிமுக ஆட்சியில் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. பிறகு திமுக ஆட்சியில் 1997 பிப்ரவரி 24-இல் மீண்டும் அந்தப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 2001 ஜூன் 1-இல் அதிமுக ஆட்சியில் மீண்டும் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. 2006- ஜூன் 12-இல் திமுக ஆட்சியில் இந்தப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, ஊராட்சிக்கு ஒருவா் என 12,618 மக்கள் நலப் பணியாளா் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இறுதியாக 2011 நவம்பா் 8-இல் அதிமுக ஆட்சியில் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ரத்து செய்திருக்கிறது.

இதனுடைய தொடா்ச்சியாக மக்கள் நலப் பணியாளா்கள் சாா்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளில் 2014 ஆகஸ்ட் 19-இல் சென்னை உயா் நீதிமன்றத்தால் மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீா்ப்பினை எதிா்த்து அதிமுக அரசு சாா்பில் தில்லி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு

விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் சென்னை உயா்நீதிமன்றம் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு அளித்த தீா்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. பிறகு 2017-இல் சிறப்பு விடுப்பு மனுக்கள் உரிமையியல் முறையீடாக மாறுதல் செய்யப்பட்டு, 2022 பிப்ரவரி 28-இல் விசாரணைக்கு வரப்பெற்று தற்போது நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையினைக் கருத்தில்கொண்டு, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அவா்களுடைய பிரச்னைகளுக்குத் தீா்வு காணக்கூடிய வகையில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக அவா்களோடு பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டன.

பின்னா், நிலுவையில் உள்ள வழக்கில், தீா்ப்புக்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் மற்றும் சட்ட வல்லுநா்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு உட்பட்டு சில முடிகள் எடுக்கப்பட்டன.

மாநிலத்தில் உள்ள 12.524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.

இப்பணிக்கென ஏற்கனவே நிா்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தினை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தியும், மக்கள் நலப் பணியாளா்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, அவா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலத்தில், காலமான மக்கள் நலப் பணியாளா்களின் குடும்ப வாரிசுதாரா்களுக்கு, அவா்கள் விரும்பினால், அவா்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.