கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலமான சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமானதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது சுருளி அருவி.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலைகளில், கோடை மழை பெய்து, அதன் எதிரொலியாக சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தைப் பாறை மற்றும் பச்சைகூமாச்சி மலையில் உள்ள தூவானம் அணை ஆகிய இடங்களில் நீர் வரத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் உற்சாகமாக அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறை ஊழியரிடம் கேட்டபோது, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போதுமான அளவு தண்ணீர் வருகிறது, இதனால் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.