

தம்மம்பட்டி அருகே அனுமதியின்றி வைத்த பெரியார் சிலையை கெங்கவல்லி வருவாய்த்துறையினர் நள்ளிரவில் அகற்றினர். சிலையை வைத்து பதட்டத்தை ஏற்படுத்திய அண்ணன், தம்பியை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில், பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தில் நேற்று இரவு, பெரியார் சிலை வைக்கப்பட்டதாக, கெங்கவல்லி வருவாய்த்துறைக்கு புகார் சென்றது. அதன்பேரில், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர், அந்த சிலையை அகற்ற சென்றனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கக்கன்செல்வக்குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர், அதிகாரிகளை தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
அதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார், சம்பவ இடத்தில் உடனடியாக குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நள்ளிரவில் சிலை அடியோடு அகற்றப்பட்டு, கெங்கவல்லி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுஇடத்தில், அனுமதியின்றி சிலை வைத்து பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும், சிலையை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்ததாகவும், செந்தாரப்பட்டி வி.ஏ. ஓ. அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி சிலை வைத்த, செந்தாரப்பட்டியைச் சேர்ந்த அண்ணன், தம்பியான கக்கன் செல்வக்குமார், ரமேஷ் ஆகிய இருவரையும் பிடித்துவந்து, தம்மம்பட்டி காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, அசம்பாவிதங்களை தடுக்க செந்தாரப்பட்டியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.