

தமிழகத்திலிருந்து குரங்கு அம்மை பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட மாதிரிகளில் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய்த் தொற்று பரவி வருகிறது. இதையடுத்து குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 4 பேருக்கு அத்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு குழந்தைகள், திருச்சி, கன்னியாகுமரியை சேர்ந்தவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குரங்கு அம்மை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் சென்னை கிங் மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.