காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காததோடு, தமிழக அரசு ஆறுதலும் கூறவில்லை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம் சாட்டினார்.
காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மற்றும் குமாரபாளையம் கரையோர பகுதிகளில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காவிரி வெள்ளத்தால் ஈரோடு மாவட்டம், பவானி கரையோர பகுதிகளில் 249 குடும்பத்தைச் சேர்ந்த 856 பேர் வெளியேற்றப்பட்டு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 245 குடும்பத்தைச் சேர்ந்த 649 பேரும், பள்ளிபாளையம் பகுதியில் 295 குடும்பங்களைச் சேர்ந்த 833 பேரும் கரையோர பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாகத் தங்க அதிமுகவினர் தொடர்ந்து உதவி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ, அதனை அதிமுக செய்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி ஆற்றுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மக்கள் எப்போது பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தொடர்ந்து உதவி வருகின்றனர். கடந்த 5 நாள்களாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை, ஆறுதல் சொல்லவும் அமைச்சர்களும் செல்லவில்லை. அவர்களுக்கு மக்களைப் பற்றி சிந்தனை இல்லை.
வீட்டு மக்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழக மக்களுக்கு உதவாவிட்டாலும், அதிமுக மக்களுக்கான இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் நேசக்கரம் நீட்டி வருகிறது என்றார்.
குமாரபாளையம் மற்றும் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைமகள் வீதி, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டதோடு மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார். பவானி நகர அதிமுக செயலாளர் எம்.சீனிவாசன், குமாரபாளையம் நகர அதிமுக செயலாளர் கே.எஸ்.எம்.பலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.