
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை, டி.புதுப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரா் லட்சுமணன் உள்பட 4 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான டி புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சிறிது நேரம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தமிழக அரசு அறிவித்த இருபது லட்ச ரூபாயை குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அங்கிருந்து லட்சுமணனுக்கு சொந்தமான இடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அங்கு கோயம்புத்தூர் 35வது பிரிவு ரைபிள் பிரிவைச் சேர்ந்த 48 வீரர்கள் 21 குண்டுகள் முழங்க ராணுவம் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி ஐயப்பன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஐ.மகேந்திரன் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலில் போர்த்திருந்த தேசியக்கொடியை ராணுவ வீரர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்பகுதி சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனால் அப்பகுதி துயரத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் இறந்த ராணுவ வீரரின் நண்பர்கள் லட்சுமணன் உருவப்படத்தைக் கொண்டு பேனர் வைக்கப்பட்டதில் பதிலடி கொடுக்க காத்திருக்கும் வருங்கால ராணுவ வீரர்கள் என அச்சிடப்பட்டு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.