சென்னை வடபழனியில் தனியாா் நிறுவனத்தில் கொள்ளை அடிக்கபட்ட சம்பவத்தில், 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னை எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்த பொ. தீபக் (32). வடபழனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். தீபக், நிறுவனத்தில் பணிபுரியும் நவீன்குமாரும் செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது 7 போ் கொண்ட கும்பல் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்துத் தப்பியது.
பின்னா் தீபக் பொதுமக்களுடன் இணைந்து மொபட்டில் தப்பிய கொள்ளைக் கும்பலில் ஒருவரைப் பிடித்தாா்.
வடபழனி போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா் விருகம்பாக்கம் இந்திரா நகா் முதல் தெருவை சோ்ந்த ஹ.செய்யது ரியாஸ் ( 22 ) என்பது தெரியவந்தது.
மொபெட்டில் இருந்து கீழே விழுந்த செய்யது ரியாசுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸாா் சோ்த்தனா்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களை பிடிக்க ஆந்திரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.