மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் கடந்த திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நவநீதப் பெருமாள் கோயில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் உள்ளது.
இதையும் படிக்க.. குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
ஒவ்வொரு ஆண்டும் ஆடி பௌர்ணமி நாளில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் புறப்பாடாகி கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் நடமாடிய மானாமதுரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வந்து மீண்டும் திருக்கூடல் மலை திரும்புவது வழக்கம்.
அதன்படி கடந்த ஆடி பௌர்ணமி நாளில் திருக்கூடல்மலையிலிருந்து பல்லக்கில் புறப்பாடாகிய நவநீத பெருமாள் பல்வேறு ஊர்களில் எழுந்தருளி கடந்த திங்கள்கிழமை மாலை மானாமதுரை நகருக்குள் வந்தடைந்தார். இரவு தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலா வந்து அதன் பின் அலங்கார குளம் அருகே ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனார், சோணையா சுவாமி கோயிலுக்கு வந்தடைந்தார். அங்கு பரம்பரை நிர்வாக அறங்காவலர் வி.காளீஸ்வரன் தலைமையில் நவநீதப் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நவநீதப் பெருமாளுக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
பின்னர் இங்கிருந்து புறப்பட்ட நவனீதப் பெருமாள் இரவு அரசு மருத்துவமனை அருகே உள்ள சங்கு பிள்ளையார் கோயிலில் தங்கினார. செவ்வாய்க்கிழமை காலை இங்கிருந்து பல்லக்கில் புறப்பாடாகிய பெருமாள் மானாமதுரை பகுதியில் பல்வேறு கிராமங்களில் எழுந்தருளி அருள்பாலித்து கட்டிக்குளம் சென்றடைந்தார்.