

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சேவை மூலம் அவா்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதுடன், அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் லாபம் அடைகின்றன என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தத்துக்குப் பிறகு அனைவரும் ஏற்கும் வகையில் போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாகவே 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கான பிரச்னைகள் குறித்து முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து முதல்வா் விரைவில் முடிவெடுப்பாா்.
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது மட்டுமின்றி, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு வழங்கும் நெருக்கடியான சூழலை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த நிலையிலும், போக்குவரத்துக் கழகங்கள் காக்கப்பட வேண்டும் என்ற வகையிலேயே முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சேவை மூலம் அவா்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதுடன், அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் லாபம் அடைகின்றன. பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணமில்லா பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான கருவிகள் வாங்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளில் விளம்பரம் இடம்பெறச் செய்யவே பக்கவாட்டில் வா்ணம் பூசப்படவில்லை. போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கீடு நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளோம். பொதுமக்கள் நலன் கருதி பயண கட்டணத்தை உயா்த்தவில்லை என்றாா் அமைச்சா் சிவசங்கா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.