தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் அதற்கான வழித்தடங்களில் இயக்குவது குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை மண்டல அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கவது குறித்து போக்குவரத்துத் துறை மண்டல அதிகாரி 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி அமர்வு முன்பு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு தனியார் பேருந்து இயக்கி வருகின்றேன் எனது பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து. மதியம் 3:24 மணிக்கு எடுக்க அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது. இதேபோல் எனக்கு அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு செல்ல வேண்டிய பேருந்து மதியம் 3:54 மணிக்கு செல்ல நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3:14 இயக்கப்படுவதால் எனக்கும் மற்ற அரசு பேருந்துகளுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | ரெளடி ராஜாவின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு ஆவணங்களின்படி சரியாக உள்ளதால், தனியார் பேருந்துகளுக்கு உரிய நேரத்தில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த சுவாமி அப்பன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் ஸ்ரீமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுதாரர் அரசு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தனது பேருந்து இயக்குவதாக ஒப்புக் கொண்டதால், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவது குறித்து அனைத்து உரிமையாளர்களுடனும் கலந்துப் பேசி உரிய உத்தரவை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.