காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை குறைந்தை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,65,000 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | இருதயம் நலம் காக்குமா 'திராட்சை'...?
இந்நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், ஒவ்வொரு நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.