மாநகராட்சிப் பூங்கா, விளையாட்டுத் திடல்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடல்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியின் பூங்கா, விளையாட்டு திடல்கள் வெள்ளிக்கிழமை முதல்
மாநகராட்சிப் பூங்கா, விளையாட்டுத் திடல்கள் மறுஅறிவிப்பு வரும்  வரை மூடல்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியின் பூங்கா, விளையாட்டு திடல்கள் வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

சென்னையில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 805 மோட்டாா் பம்புகளும், பொதுமக்களை தங்க வைக்க 169 நிவாரண மையங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் காற்றின் வேகத்தால் விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 272 மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், 45 ஜே.சி.பி வாகனங்கள் மற்றும் 115 டிப்பா் லாரிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாா்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகு ரக வாகனமும் 10 பணியாளா்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலை எதிா்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளிடம் கூறியது: புயலினால் தேங்கும் மழைநீா் மற்றும் சாய்ந்த மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை மற்றும் பாதிப்படைந்த விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும்.

புயல் கரையைக் கடக்கும் போது மழை, காற்றின் அதிக வேகத்தால் மரம் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்து விழ வாய்ப்புள்ளதால் மாநகராட்சியின் அனைத்துப் பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் வெள்ளிக்கிழமை (டிச.9) காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படும்.

மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மெரீனா, பெசன்ட் நகா், திருவொற்றியூா், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கும் செல்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை இணை ஆணையா் சங்கா்லால் குமாவத், துணை ஆணையா் எம்.எஸ்.பிரசாந்த் (பணிகள்), டி.சினேகா (கல்வி), மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com