மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அனில் தேஷ்முக், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு போலீஸாரை கட்டாயப்படுத்தியதாக அப்போதைய காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா்.
இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மாதம் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது.
இதையடுத்து 13 மாத சிறைக்குப் பிறகு தேஷ்முக்கிற்கு மும்பை உயர்நீதிமன்றம் ரூ.1,00,000-த்துடன் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.