

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அரசு மருத்துவா்கள், பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தின் சங்கத்தின் தலைவா் பி.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை மக்களுக்கு சிறப்பு, உயா் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்க 2009-ஆம் ஆண்டு கலைஞா் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் இந்தக் காப்பீட்டு திட்டம் மூலம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னா் 2011-ஆம் ஆண்டு, இந்தத் திட்டம் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில், அறுவை சிகிச்சைகள் மட்டுமல்லாமல் மருத்துவ சிகிச்சைகளும் உள்ளடக்கி அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கி ஆண்டுதோறும் சுகாதார பட்ஜெட்டுக்கு நிகரான பகுதியளவு பெரிய தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு தருகிறது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதியில் மூன்றில் ஒரு பங்கு அளவே காப்பீடு நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. அதிலும் பல்வேறு பிரச்னைகள். மீதியுள்ள மூன்றில் இரு பங்கு பணம் காப்பீட்டு நிறுவனங்களுக்கே கிடைக்கிறது.
எனவே, காப்பீட்டுத் திட்டதினை நிறுத்துவதோடு, அதற்கான முதலீட்டைக் கொண்டு அரசே தேவையான மருந்துகள், உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளை தனியாருக்கு தாரை வாா்க்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.