சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது
மார்கழி மாத தொடக்கத்தினையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் வளாகம் தூய்மைபடுத்தப்பட்டு கோயில் கோபுரம், வளாகங்கள் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டன. அதனையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் மற்றும் முருகன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனர்.
அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில்
சங்ககிரி, வி.என்.பாளையம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாத தொடக்கத்தினையொட்டி வரதாராஜபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் பெருமாள் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.