சீர்காழி: சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கால் அகற்றும் நிலையில் உயிருக்கு போராடும் 9-ஆம் வகுப்பு மாணவி, தன் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பனங்காட்டு தெரு, அம்மன் நகரில் வசிப்பவர் கனிமொழி. இவரது கணவர் முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் அபிநயா (14).
இவர் சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு காலில் எஸ்இஎல் என்ற அரிய வகை கால் அழுகல் நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை பரிசோதித்துவிட்டு, இவரது இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா தந்தையை இழந்த நிலையில், மருத்துவச் செலவும் செய்ய முடியாமல், தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.
தனது கால்களை அகற்றாமல், தனது நோய்க்கு சிகிச்சை அளித்து, தன்னைக் காப்பாற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கால்களை வெட்டி அகற்றி அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் நிலையில் தான் இல்லை என்றும், எப்படியாவது அறுவைசிகிச்சை செய்யாமல் தன்னைக் காப்பாற்றும் சிகிச்சை அளிக்கவும், தன்னால் கால்வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் தமிழக முதல்வரை மட்டுமே தான் நம்பியிருப்பதாகவும் மாணவி அபிநயா கூறுகிறார்.