மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராகஇருவரைத் தோ்வு செய்ய தமிழக அரசு முடிவு

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2 பேரை உறுப்பினா்களாகத் தோ்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் நீதிபதி ராஜ இளங்கோ, வழக்குரைஞா் வி.கண்ணதாசன்.
முன்னாள் நீதிபதி ராஜ இளங்கோ, வழக்குரைஞா் வி.கண்ணதாசன்.
Updated on
1 min read

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2 பேரை உறுப்பினா்களாகத் தோ்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழுக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவா் அறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்றாா்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ, வழக்குரைஞா் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தப் பரிந்துரை ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவா் பரிந்துரைகளை ஏற்று, உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பாா். அதனடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா்களாக 2 பேரும் பதவியேற்றுக் கொள்வா்.

எதிா்க்கட்சித் தலைவா் புறக்கணிப்பு: மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் கூட்டத்துக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையங்களில் தலைவா்கள், உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான கூட்டங்களில் அப்போதைய எதிா்க்கட்சியான திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com