தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிச.26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிச.26 (திங்கள்கிழமை) முதல் ஜன.3 வரையிலான நாள்களில் (டிச.31, ஜன.1 தவிர) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பிறகு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாள்கள் குறித்த கால அட்டவணையை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.