தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதவிர, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதியை அளித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
‘தமிழ் இலக்கியவியல்’ துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி
புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.
8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
அதுபோல, மறைந்த தமிழறிஞர்கள் நெல்லை கண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, முனைவர் ந. இராசையா நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.