தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையடுத்து காலை முதல் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை மேலே ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து அப்பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி பத்மாதேவி. இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் தீக்குளிக்க முயற்சித்த பத்மாதேவி.
இந்நிலையில், கரோனா காலக்கட்டத்தில், சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால், ஒரு நபரிடம் ரூ.4 லட்சம் வட்டிக்கு கடனாக கடந்த 2017 ஆம் ஆண்டு வாங்கினாராம்.
இதுவரைரூ.7 லட்சம் செலுத்திய நிலையில், மீண்டும் ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என, கடன் கொடுத்த நபர் பத்மாவிடம் எழுதி வாங்கினாராம். இதனால், மனமுடைந்த அவர், தீக்குளிக்க முயற்சித்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல மனு கொடுக்க வருபவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் சிறிய கேனில் பெட்ரோல் வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே அதை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரித்ததில், அவர் இடம் அளப்பது தொடர்பாக மனு அளிக்க வந்ததும், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியபோது, கூடுதலாக இருந்த பெட்ரோலை கேனில் நிரப்பிக் கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.