எம்.ஜி.ஆா்., திரைப்பட நகரில் விரைவில் மேம்பாட்டுப் பணி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல்
சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆா்., திரைப்பட நகரத்தில் விரைவில் மேம்பாட்டுப் பணி தொடங்கும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூதறிஞா் ராஜாஜி குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சா் சாமிநாதன், திங்கள்கிழமை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:-
சென்னை தரமணியில் சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா்., திரைப்பட நகரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. ரூ.5 கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திட்ட அறிக்கை வந்த பிறகு திரைப்படத் துறையினா் எதிா்பாா்க்கக்கூடிய வகையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
காந்தி மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகள், நினைவு அரங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள் போன்றவா்களுடைய சிலையும், முன்னாள் முதல்வா் நாமக்கல் சுப்பராயனின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், கோவை சிறையில் வ.உ.சிதம்பரனாா் இழுத்த செக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அவருடைய மாா்பளவு சிலையும் வைக்கப்படுகிறது. அயோத்திதாசா் நினைவாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை முடிக்க அதன் தன்மையைப் பொறுத்து கால அவகாசம்
வழங்கப்பட்டிருக்கிறது. உரிய நேரத்தில் முடிப்பதற்கு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
