தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0-வின் ஒரு பகுதியாக, 127 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும் கடந்த டிச.12 முதல் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 19 நாள்களில் 1,811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா். ரூ.1 கோடியே 84 லட்சத்து 71 ஆயிரத்து 80 மதிப்புள்ள 1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 127 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 934 மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநகர காவல் ஆணையா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ளவா்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள்,வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தலை தடுக்க, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.