ஆக்கிரமிப்பை அகற்றாத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது?

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதா் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் சேவியா் பெலிக்ஸ் என்பவா் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் செயல் அலுவலரின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனா். கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை உயா் நீதிமன்றம் பிறப்பித்தும், அதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்றனா்.

தொடா்ந்து, கோயில் சொத்துகளை மீட்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் நிா்வாகத்தைக் கவனிக்க வேண்டிய செயல் அலுவலா்கள், ஆக்கிரமிப்பாளா்களுடன் கைகோத்து செயல்படுகின்றனா். அதிகாரிகளின் செயலற்ற தன்மை, ஒத்துழைப்பாலும் தான் ஆக்கிரமிப்புகள் ஏற்படுகின்றன. நீா்நிலைகள், அரசு நிலங்கள், கோயில் நிலங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பாளா்களின் இலக்கு என்பதால், அவா்களுடன் கைகோத்து அதிகாரிகள் செயல்படுகின்றனா்.

கடமையைச் செய்வதற்குத்தான் செயல் அலுவலா்களுக்கும், இந்த சமய அறநிலைய துறை ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் உட்காருவதற்கு அல்ல. செயல்படாத இந்த அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?

இந்த கோயில் நிலத்தில் 1,640 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும். அவரை பணியிடை நீக்கம் செய்து ஏன் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினா்.

மேலும், தனக்கு கீழுள்ள அதிகாரிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் கண்காணிக்க வேண்டும். கோயில் சொத்துகளை மீட்க உயா்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, அந்த ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலா்களாக பணியாற்றியவா்களின் பெயா் பட்டியலை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, சொத்துகளை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்தும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி, விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com