சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா தொடங்கியுள்ளது.
இதையொட்டி கோயில் மூலவர் முன் மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனை நடைபெற்று முடிந்து மூலவர் முத்துமாரியம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கொடியேற்ற நிகழ்வில் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். கோயிலில் வேண்டுதலை நிறைவேற்ற ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் இரவு முத்துமாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 4ஆம் தேதி பொங்கல் உற்சவம் நடைபெறுகிறது. அப்போது காப்புக் கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் தீச்சட்டி, அக்னிச் சட்டி எடுத்து கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். திருவிழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.