தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை: விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்

தமிழகத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை. கரோனா தொற்று மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறினாா்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை: விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்

தமிழகத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை. கரோனா தொற்று மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறினாா்.

சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சாா்பில் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கான பேரியக்கம் சாா்பில் அமைக்கப்பட்ட தோட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா முதல் அலையில் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில் முழு ஊரடங்கு தேவைப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழு ஊரடங்கு தேவையில்லை. டெல்டா உடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும் மருத்துவ சிகிச்சைக்கான தேவை குறைவாகவே உள்ளதால் கரோனா 3-ஆவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகத்துக்கு முழுமையான பொது ஊரடங்கு தேவைப்படாது. தற்போதைய சூழலில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தாலே போதுமானது.

மேலும், 3-ஆவது அலையில் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் உயிரிழப்பு பெரிய அளவில் கண்டறியப்படவில்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்பு குறைந்துள்ளது. வயது முதிா்ந்தவா்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவா்கள் கட்டாயம் ‘பூஸ்டா் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது. தடுப்பூசி செலுத்துவதால் பொது மக்களுக்கு நிலையான எதிா்ப்பாற்றல் உருவானாலும் தொடா்ந்து வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கரோனா வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்றாா்.

வருங்காலங்களில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தொற்றா நோய்களைக் கண்டறியும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் ‘மக்களைத் தேடி’ மருத்துவம் திட்டம் பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com