தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
மூன்றாவது முறையாக முழு ஊரடங்கு ஜனவரி 23-ஆம் தேதி அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள், மருந்து பணிகள், மருந்தகங்கள், பால், நாளிதழ் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. மேலும், பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது.
பலத்த பாதுகாப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தலைமையில் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் போலீஸாா் கண்காணிக்கின்றனா். சாலைகளில் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, பத்திரிகைதுறை, பால் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் சாலைகளில் சென்றால் அவற்றைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதியும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என தமிழக காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்கள், வெளியூா் பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வாடகை ஆட்டோக்கள், காா்கள் இயங்க இந்த ஊரடங்கின்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் முழு பொது ஊரடங்கையொட்டி, சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. நகா் முழுவதும் 312 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படுகிறது. வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் முக்கியமான சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஊரடங்கை மீறுபவா்கள் மீது எவ்வித சமரசமுமின்றி வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கையொட்டி, நகரில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய வகை மேம்பாலங்களும் தடுப்பு வேலிகள் மூலம் போலீஸாா் மூடியுள்ளனா். அதேபோல சென்னையில் சாலைகளில் இருக்கும் 408 சிக்னல்கள் இயக்கம் நிறுத்தப்படுகின்றன.
புகா் பகுதியில்...: தாம்பரம் ஆணையரக பகுதியில் 72 இடங்களில் நடைபெறும் வாகன சோதனையில் 1,200 போலீஸாரும் ஆவடி காவல் ஆணையரக பகுதியில் 109 இடங்களில் நடைபெறும் சோதனையில் 1,750 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.