பெரம்பலூர் அருகே சேதப்படுத்தப்பட்ட கோயில் சிலைகளை மீண்டும் புனரமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் உபக்கோயிலான பெரியசாமி, செல்லியம்மன் கோயில் சிலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் சேதப்படுத்தபட்டதையடுத்து, அதை புனரமைப்பதாகக் கூறி யூடுபர் கார்த்திக் கோபிநாத் என்பவர் நிதி வசூல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்த கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் உபக்கோயிலில் உடைக்கப்பட்ட சிலைகள் மீண்டும் நிறுவுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளது. சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும்.
மேலும், சிலைகளின் பாதுகாப்பிற்காக திட்டமிட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். யூடுபர் கார்த்திக் கோபிநாத் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதிகளவு கருத்து பரிமாற்றம் செய்யும் நிலை இல்லை.
திருக்கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்காக போதிய நிதியை இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கும்.
கோயில் குத்தகை நிலங்கள் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. பிஜேபி. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டு தங்களின் பயணத்தில் வரும் சிறு சிறு இடையூறாகத்தான் கருதுகிறோம்.
மக்களால் அங்கீகரிக்கப்பட்டது திமுக ஆட்சி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சி திமுக. ஆக்கப்பூர்வமான பணிகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றார் அவர்.