சேலம்: சேலம் அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்வு நடத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கலாச்சாரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் மஞ்சள் நீராட்டு விழா திருமணம் வளைகாப்பு என ஒவ்வொரு பருவத்திலும் பெண்மையைப் போற்றும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவர்.
ஆனால் வீட்டில் வளர்த்து வரும் செல்ல பிராணியான நாய்களுக்கு சிறப்பு வளைகாப்பு விழாவை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஒரு தம்பதியினர் ஈர்த்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் நடராஜன். இவரது மனைவி பெயர் சுசீலா. இவர்கள் வீட்டில் 20 மாதங்களாக ஹைடி என்ற ஆண் நாயும் 9 மாத சாரா என்ற பெண் நாய் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் சாரா கர்ப்பம் தறித்துள்ளது. இந்த நிலையில் தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த பெண் நாய் கர்ப்பம் அடைந்ததால் வீட்டில் ஒரு உறுப்பினராக வளர்த்து வந்த சாராவுக்கு பெண்களுக்கு நடத்தப்படுவதை போல வளைகாப்பு நடத்த வேண்டுமென அவர்களது மகள் ஆசை பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்க, கடந்த 13ஆம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது. இதற்காக தனியாக பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் தனித்தனி இருக்கைகளில் இரு நாய்களையும் அமர வைத்து மஞ்சள் குங்குமமிட்டு சாராவுக்கு வளையலை மாற்றினர். தொடர்ந்து விழாவுக்கு வந்தவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட ஐந்து வகையான அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
அத்துடன் சாராவுக்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, சுண்ணாம்பு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவையும் வழங்கப்பட்டது.
மனிதனுக்கு மனிதன் இடையே நட்பு பாராட்ட மனிதநேயம் குறைந்த இன்றைய காலகட்டத்தில் தங்கள் வீட்டில் வளர்த்த செல்லப்பிராணிகளுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை போல இந்த தம்பதியினர் வளர்த்த நாய்களுக்கு வளைகாப்பு செய்த சம்பவம் எந்த உயிராக இருந்தாலும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற இவர்களின் மனிதநேயம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.