
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் மனமுடைந்து, விஷம் குடித்து விட்டு மயானத்திற்கு சென்று படுத்துக் கொண்ட முதியவர் பரிதாபமாக இறந்துபோனார்.
இச்சம்பவம் இவரது உறவினர்கள் மட்டுமின்றி, கிராம மக்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி அடுத்த கொட்டவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பெரியசாமி (70). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், தும்பல் அய்யம்பேட்டை பகுதிக்கு குடும்பத்தோடு சென்று குடியேறி விவசாயம் செய்து வந்தார்.
தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, எந்நேரமும் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு, சுயமரியாதை கருத்துக்களை பின்பற்றி நாத்திகனாக வாழ்ந்து வந்தார்.
குடும்பத் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்து காணப்பட்ட பெரியசாமி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தும்பல் அய்யம்பேட்டை கிராமத்தில் இருந்து, தனது பூர்வீக கிராமமான கொட்டவாடிக்கு சென்றுள்ளார். விவசாய பயிர்களுக்கு பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தப்படும் விஷ மருந்தை வாங்கிக் கொண்டு, கொட்டவாடியில் உள்ள மயானத்திற்கு சென்ற இவர், விஷ மருந்தை குடித்து விட்டு, மயானத்திலேயே படுத்துக் கொண்டார்.
முதியவர் பெரியசாமி மயானத்தில் படுத்துக் கிடப்பதை கண்ட அந்த கிராம மக்கள், அருகில் சென்று பார்த்தபோது, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் ஏத்தாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மயானத்தில் இறந்து கிடந்த முதியவர் பெரியசாமி உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறில் விரக்தி அடைந்த, பகுத்தறிவு, சுயமரியாதை முற்போக்கு சிந்தனை கொண்ட முதியவர் பெரியசாமி, விஷம் குடித்துவிட்டு மயானத்தில் சென்று படுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இவரது உறவினர்கள் மட்டுமின்றி இரு கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவிற்கு, உறவினர்கள், கிராம மக்கள் மட்டுமன்றி, திராவிடர் கழகத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.