போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்னப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் துறை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நேற்று (மார்ச் 29) பெருமளவு பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 32 சதவிகித பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. இதனால் பயணிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தமிழகம் முழுவதும் நேற்றை விட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 92 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது.
எஸ்.எஸ். சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறை
ராஜகண்ணப்பன் நிர்வகித்து வந்த போக்குவரத்துத் துறை எஸ்.எஸ்.சிவசங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. 52 வயதாகும் எஸ்.எஸ். சிவசங்கர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார். இவர் திமுக முன்னாள் எம்.பி.யும். மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ். சிவசுப்பிரமணியன் மகன் ஆவார்.